குடியுரிமை சட்டத்திற்கெதிராக போராடிய வெளிநாட்டு மாணவர் வெளியேற்றம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய ஜெர்மன் மாணவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என எழுத்துபூர்வ உத்தரவு தனக்கு அளிக்கப்படவில்லை, மாறாக வாய்மொழி உத்தரவு மட்டுமே அளிக்கப்பட்டது எனக் கூறியுள்ளார்.

வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவின் கல்வி நிறுவனத்தை தேர்வு செய்து படிக்கும் திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடிக்கு படிக்க வந்த மாணவர், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் கலந்துக்கொண்டதற்காக நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டது.

எனக்கு அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் சென்னையின் குடியேற்ற அதிகாரி இந்தியாவில் இருந்து கிளம்ப வேண்டும் என்று கூறியதால்தான், ஜெர்மனிக்கே தான் திரும்பி சென்றதாக பிபிசியிடம் கூறுகிறார் மாணவர் ஜேக்கப் லிண்டேன்தால்.

டிசம்பர் 16 மற்றும் 19ம் தேதிகளில் சென்னையின் பல இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த போராட்டத்திலும் ஜெர்மன் நாட்டை சேர்ந்த மாணவர் ஜேக்கப் லிண்டேன்தால் கலந்துக்கொண்டனர். அவர் போராட்டத்தில் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இந்திய ஊடகங்களில் அதிகமாக வெளிவந்தன.

இதை தொடர்ந்து சென்னையில் உள்ள குடிவரவு அலுவலகம் (வெளிநாட்டினர் வருகையை பதிவு செய்யும் அலுவலகம்) டிசம்பர் 23ம் தேதி ஜேக்கப்பை அழைத்து, அவரின் விசா விதிமுறைகளின்படி அவர் எந்த போராட்டத்திலும் கலந்துகொள்ள கூடாது, ஆனால் அதையும் மீறி அவர் போராட்டத்தில் ஈடுபட்டதால், இந்திய நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது.