கிழக்கில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் நபர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒன்பது பேர் வெளி மாவட்டங்களில் உள்ள தங்களது உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று மீண்டும் தமது சொந்த இருப்பிடங்களுக்கு வருகை தந்தை நிலையில் நேற்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வருகை தந்தவர்களில் நான்கு பேர் அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசத்திலும், ஏனைய ஐந்து பேர் யாழ்ப்பாணம், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து கிரான் பிரதேசத்திற்கு வந்துள்ளதாக கோறளைப்பற்று மத்தி மற்றும் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஆர்.இன்பராஜா தெரிவித்தார்.

மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஆர்.இன்பராஜா தலைமையில் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்களான எம்.நௌஷாட், கே.சோபனகாந்தன் ஆகியோரால் ஒன்பது நபர்களின் உடல் நிலைகள் பரிசோதனைகள் செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.