கிழக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறில் இன்றைய தினம் ஐந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 22ஆம் திகதி இருவர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்தி தொடர்ச்சியான மருத்துவ சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் பெரியகல்லாறு கலைமகள் வீதி தனிமைப்படுத்தப்பட்டு அங்குள்ளவர்களுக்கு தொடர்ச்சியான  மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன.

இன்று மாலை கலைமகள் வீதியில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய 47பேர் மருத்துவ சோதனைகளுக்குட்படுத்தப் பட்ட நிலையில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் உட்பட ஐந்து பேர் கொரோனா தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவி ஒருவரிடம் ஏற்பட்டிருந்த தொற்று சில மாணவிகளையும் தொற்றுக்குள்ளாக்கியுள்ளதாகவும் குறித்த மாணவியுடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரையில் பெரியகல்லாறு பகுதியில் 97பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்தும் தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர்  கூறியுள்ளனர்.

பெரியகல்லாறு உட்பட அதனை அண்டியுள்ள பிரதேச மக்கள் தேவையற்ற வகையில் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுவரையில் கிழக்கு மாகாணத்தில் 958 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.