கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

கிளிநொச்சி அறிவியல் நகர்  பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில்  ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி   மாவட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன்,  மதுவரித்திணைக்களத்தின் வாடகை வாகனம் இந்த சம்பவத்தில் சேதமடைந்துள்ளது

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “கிளிநொச்சி பகுதியில் பாரிய போதைப்பொருள் கடத்தல் இடம்பெறவுள்ளதாக கெப்பற்றிகொல்லாவ மதுவரித்திணைக்களத்துக்கு கிடைத்த தகவலையடுத்து, மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஒருவரும் உத்தியோகத்தர் ஒருவரும்  வாடகைக்கு வாகனம் ஒன்றில், தகவல் வழங்கிய நபருடன் அறிவியல்நகர் காட்டுப் பகுதிக்குள்  சென்றுள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சி பொலிஸாரும் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சிவில் உடையில் சென்ற பொலிஸார்  மதுவரித்திணைக்களத்தினர் பயணித்த வாடகை வாகனத்தை நிறுத்துமாறு கூறிய போது அவர்கள் வாகனத்தை நிறுத்தாது சென்றுள்ளனர்.

இந்த நிலையிலேயே,  வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதுடன், தகவல்  வழங்கிய நபரே இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார.

இதன் பின்னரே, காரில் பயணித்தவர்கள் மதுவரித்திணைக்களத்தின்  அதிகாரிகள் என்பது தெரியவந்துள்ளது.

காயமடைந்த நபர், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.