காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வடமராட்சி இளைஞரை பார்வையிட பாராளுமன்ற உறுப்பினருக்கு அனுமதி மறுப்பு

வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியைச் சேர்ந்த உதயசிவம் என்பவர் 2020 மார்ச் 04ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு, இன்றுவரை விடுதலை செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

காலி தங்காலையிலுள்ள கோட்டை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை பார்வையிட அவரது குடும்பத்தினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் சென்றிருந்தனர். ஆனால் பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரனை சிறைச்சாலை நிர்வாகத்தினர் அனுமதிக்கவில்லை.

இந்த சிறைச்சாலையில் உதயசிவம் என்பவருடன் 18 பேர்வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிவதாகவும், இவர்களின் விடுதலை தொடர்பாக தான் பாராளுமன்றத்தில் ஏற்கனவே பேசியிருப்பதாகவும், போதைவஸ்து கடத்தல், சட்டவிரோத மீன்பிடி போன்றவற்றை கண்டித்தமையாலேயே உதயசிவம் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், பொய்யான குற்றச்சாட்டுகளை அவர்மேல் சுமத்தி அவரின் விடுதலையை தாமதிப்பதாகவும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தான் கோரிக்கை விடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் தமது முகநூல் வழியாக கோரிக்கை விடுத்துள்ளார்.