காத்தான்குடிப்பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு

காத்தான்குடிப்பிரதேசம் எதிர்வரும் 15ம் திகதிவரை தனிமைப் படுத்தபட்ட பிரதேசமாக நீடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

காத்தான்குடி பகுதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்  மருத்துவ மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுவதன் காரணமாக தனிமைப்படுத்தல் காலத்தினை நீடிக்க தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட கோவிட் கட்டுப்பாட்டு பணிகளை ஒருங்கினைக்கும் அதிகாரி மேஜர் ஜெனரல் சீ.டீ ரணசிங்கவின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்த மழை வீழ்ச்சி காரணமாக காத்தான்குடி பிரதேச செயலக பிரிவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 144.2வீத மழைவீழ்ச்சி  பதிவாகியுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

காத்தான்குடி பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு அனர்த்த முகாமைத்து நிலையம் ஊடாக நிவாரணம் வழங்க நடவடிக்கையெடுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரையில் 13001குடும்பங்களை சேர்ந்த 43387பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.