காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை உயிரிழப்பு

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி இன்று வரை போராடி வந்த ஒரு தந்தை மன்னாரில் உயிரிழந்துள்ளார்.

மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியைச் சேர்ந்த சூசைப்பிள்ளை இராசேந்திரம் என்னும் 73 வயதுடையவரே இவ்வாறு மரணத்தைத் தழுவியவராவார்.

இவரது மகன் இராசேந்திரம் அன்ரனி ரஞ்சன் என்பவர் 2008ஆம் ஆண்டு மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சமயத்தில் காணாமல் போயிருந்தார். இவர் திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று முதல் இன்று வரை தனது மருமகளுடன் தனது மகனைத் தேடி தொடர்ந்து நீதிகோரி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் வவுனியா மாவட்ட செயலாளராக செயற்பட்டு வரும் ஜெயக்குமாரி என்பவரின் கணவனே காணாமல் ஆக்கப்பட்டவர் என்பதுடன், அவரின் தந்தையாரே மரணத்தை தழுவியுள்ளார்.