கர்ப்பிணிப்பெண், சிறுவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட ஸ்ரீலங்கா இராணுவம்!

யாழ். நகர்கோவில் கிழக்கு பகுதியில் இராணுவத்தினர் இளைஞன் ஒருவனை கைது செய்ய முயற்சித்த போது அவர் தப்பி சென்ற நிலையில் பொதுமக்கள் மீது குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கடந்த தை பொங்கல் தினத்தன்று இதே பகுதியில் இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் தர்க்கம் உருவானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டதுடன் பிரதான சந்தேகநபர் என ஒரு இளைஞனை இராணுவம் தேடிவந்தது. ஆனாலும் நீதிமன்றில் அவ்வாறு எவரையும் தேடவில்லை என பொலிஸார் கூறியிருந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினமும் ப.ஐங்கரன் என்ற இளைஞனை நாகர்கோவில் கிழக்கு கடற்கரையில் வைத்து கைது செய்ய இராணுவ புலனாய்வு பிரிவு முயற்சித்த போது அவர் கடலில் குதித்து நீந்தி தப்பியுள்ளார்.

இதனையடுத்து கரையில் நின்றவர்கள் மீதும், தப்பி சென்ற இளைஞனின் சகோதரிகள் மீதும் இராணுவத்தினரால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. தாக்குதலுக்குள்ளான இரு பெண்களில் ஒரு கர்ப்பிணிப் பெண் என கூறப்படுகிறது.

மேலும் சிறுவன் ஒருவன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனை தப்பிச் சென்ற ஐங்கரன் என்ற நபரின் மனைவி உறுதிப்படுத்தியுள்ளதுடன், இராணுவ சீருடை மற்றும் சிவில் உடையில் ஆயுதங்களுடன் வந்தவர்கள் தாக்கியதாகவும் கூறியுள்ளார்.