ஒரு போர்க்குற்றவாளி என கோட்டபாய நிரூப்பித்துவிட்டார் – அனந்தி சசிதரன்

தமிழீழ  தேசியத் தலைவர் பிரபாகரனைப் பற்றி, கோட்டாபய ராஜபக்ஷ கூறியமை தொடர்பில், வட மாகாண முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழக செயலாளருமான அனந்தி சசிதரன், தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டு தனது கருத்தை பிபிசி தமிழிடம் தெரிவிக்கையில்,

“எவ்வளவு மன வக்கிரமுடையவராக இருந்திருந்தால், இவ்வாறான ஒரு செய்தியை சிங்கள மக்கள் மத்தியில் – இனவாதத்தைப் பரப்பும் நோக்கில் அவர் கூறியிருப்பார் என்று புரிகிறது.

உண்மையில் தேசியத் தலைவர் பிரபாகரனை இவர் கொன்றிருந்தால், இந்திய அரசுக்கு ஏன் இவர் மரண சான்றிதழை வழங்கவில்லை என்கிற கேள்வியை நாங்கள் முன்வைக்கின்றோம். பிரபாகரனை இவர்கள் கொன்றிருந்தால், அவரின் டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்ள ஏன் இவர்கள் உடன்படவில்லை என்கிற கேள்வியினையும் முன்வைக்க வேண்டியுள்ளது.

எனவே தேசியத் தலைவர் பிரபாகரனை ‘நாய்போல இழுத்துச் சென்றேன்’ எனக் கூறுகின்ற, வக்கிரம் நிறைந்த அவரின் பேச்சை, மேற்சொன்ன விடயங்களினூடாக நிரூபிக்க முடிந்தால் நிரூபிக்கட்டும்.

சிங்கள மக்களை வெறுமனே உசுப்பேற்றவும், தற்போது இழந்து கொண்டிருக்கும் தமது செல்வாக்கை நிலைநாட்டுவதற்காகவுமே, இந்த சொற்களை அவர் பயன்படுத்தியதாக நான் கருதுகிறேன்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் பத்திரிகையாளர்கள், “’நீங்கள் போர்க்குற்றம் புரிந்துள்ளீர்களா”? எனக் கேட்டபோது, யுத்த காலத்தில் தான் ஓர் அரச அதிகாரியாக மட்டுமே இருந்ததாகத் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது  அவர் ஆற்றிய உரையின் ஊடாக, தான் ஒரு போர்க்குற்றவாளி என நிரூபித்திருக்கின்றார்”  என்றார்.