ஐ.தே.க. தேர்தல் அலுவலகத்துக்குள் புகுந்த இனந்தெரியாத குழு தாக்குதல்; கிருலப்பனையில் சம்பவம்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஐ.தே.க. வேட்பாளர் ஒருவருடைய தேர்தல் அலுவலகத்துக்குள் புகுந்த ஒரு குழுவினர் நேற்று திங்கட்கிழமை காலை தாக்குதல் நடத்தியுள்ளனர். கொழும்பு, கிருலப்பனையில் அமைந்துள்ள அவருடைய அலுவலகமே இவ்வாறு தாக்குதலுக்குள்ளானது.

ஐ.தே.க. வேட்பாளரான ரைட்டஸ் பெரேராவின் அலுவலகமே இவ்வாறு தாக்கப்பட்டதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் (CMEV) தெரிவித்திருக்கின்றது. இதன்போது அலுவலகத்தில் இருந்தவர்ககள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்த நிலையத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனந்தெரியாக குழு ஒன்றே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், இத்தாக்குதலில் அலுவலகம் பலத்த சேதமடைந்ததுடன், அங்கிருந்த இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான பரப்புரைகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் இடம்பெற்றுள்ள முதலாவது சன்முறைச் சம்பவமாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.