ஐ.தே.க இரண்டாக பிளவு – புதிய கூட்டணி அமைக்க திட்டம்?

சிறீலங்காவின் மிகவும் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கட்சி தலைமைப் பொறுப்பு தொடர்பில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாகவே கட்சி இரண்டாக உடைந்துள்ளது. சஜித் பிரேமதாசா தலைமையில் ஒரு குழுவினரும், ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் மற்றும் ஒரு குழுவினரும் பிரிந்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (16) இடம்பெற்ற நாடாளுமன்றக்குழு கூட்டத்தின் போது இரு தரப்பினரும் பலத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தகாத வார்த்தைப் பிரயோகங்களிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் இருந்து வெளியேறிய சஜித் பிரேமதாசா தலைமையிலான குழுவினர் புதிய பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (17) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.