ஏமாறியதும் நீங்களே,ஏமாற்றியதும் நீங்களே- சுரேஷ்

சம்பந்தர் விக்னேஸ்வரனை நம்பிக்கெட்டார் என்றும் விக்னேஸ்வரன், சம்பந்தனுக்குக் கொடுத்த பல உறுதிமொழிகளை அவர் காப்பாற்றவில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் க.பிறேமச்சந்திரன் அறிக்கையொன்றினை விடுத்துள்ளார்.

அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

அண்மையில் வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் சம்பந்தன் முன்னைய அரசாங்கத்தை நம்பிக்கெட்டார் என்றும் அவ்வாறான விடயங்கள் தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன், சம்பந்தன்தான் விக்னேஸ்வரனை நம்பிக்கெட்டார் என்றும் விக்னேஸ்வரன், சம்பந்தனுக்குக் கொடுத்த பல உறுதிமொழிகளை அவர் காப்பாற்றவில்லை என்று கூறியிருப்பதுடன் அரசாங்கத்துடன் தாம் நடத்திய பேச்சுவார்த்தைகளை நியாயப்படுத்தியும் அவரது பதில் அமைந்திருந்தது.

இங்கே கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான எமது அனுபவம் தொடர்பாக சில கருத்துகளை முன்வைக்க விழைகின்றோம்.

முதலாவதாக, விக்னேஸ்வரன் அவர்களின் கூற்றின் பிரகாரம் சிங்கள அரசியல் தலைமை என்பது தமிழ் மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வந்திருக்கிறது என்றும் அதன் ஒரு பகுதியாக கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் சம்பந்தனும், சுமந்திரனும் அவர்களது குழுவினரும் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அதில் என்ன தவறு இருக்கின்றது? இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து ஒவ்வொரு நாடாளுமன்றத்திலும், புதிய அரசியல் சாசனங்கள் வருகின்றபோதும் தமிழ் மக்கள் முழுமையாக ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது இந்த நாட்டின் அரசியல் வரலாறு. அதைப் போலவே, விடுதலைப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர், மகிந்தராஜபக்ச அவர்களின் அரசாங்கத்திலும், ரணில்-மைத்திரி நல்லாட்சி அரசாங்கத்திலும் தமிழ்த் தலைமைகள் ஏமாற்றப்பட்டிருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்வதற்கு கூச்சநாச்சப்படவேண்டிய தேவை என்ன?

கடந்த நல்லாட்சி அரசாங்கம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தாங்கள் அங்கம் வகித்த நல்லாட்சி அரசாங்கம் தங்களை ஏமாற்றிவிட்டதாக ஊடகங்களில் தெரிவித்திருந்தார். இதனைக்கூட சுமந்திரன் கவனத்தில் கொள்ளாமல் கடந்த அரசாங்கம் தங்களை ஏமாற்றவில்லை என்ற பாணியிலும் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்தான் தங்களை ஏமாற்றியவர் என்று சொல்வதானது நகைப்புக்குரிய விடயமாகும்.

விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதல்வராகியபொழுது, அத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தன் சுமந்திரன் போன்றோர் முட்டுக்கட்டையாக இருந்தார்கள் என்பதுதான் உண்மை.

மாகாணசபை எந்தவொரு அரசியல் தீர்மானத்தை எடுப்பதற்கும் இவர்கள் தொடர்ச்சியாக முட்டுக்கட்டையாக இருந்தனர். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை ஒன்று நடந்தது என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முதலமைச்சர் பலமுறை முயற்சித்தபோதும் இவர்களின் தலையீட்டினால் அது தள்ளிக்கொண்டே போனது.

பின்னர் சபை அங்கத்தவர்கள் அனைவரின் ஆதரவுடன் அது நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமல்லாமல், தமிழரசுக் கட்சியினரே முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்திருந்தனர். ஆகவே யார் யாரை ஏமாற்றினார்கள் என்பதை திரு.சுமந்திரன் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சுமந்திரன் கடந்தகாலத்தில் மக்களுக்குக் கூறிய விடயங்களை அவர் மறந்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை அவருக்கு நினைவுபடுத்துகிறோம். நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றுக்கொண்ட சூட்டோடு நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் அன்றைய மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் திரு.சையட் ராட் அல் ஹுசைன் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளின்மீது அதிருப்தியுற்று கடுமையான நடவடிக்கைகளை பரிந்துரை செய்திருந்த வேளையில், தற்போது புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது எனவே ஒரு கலப்புப் பொறிமுறையினூடாக இலங்கையில் நடைபெற்ற குற்றச் செயல்களுக்கு விசாரணை நடத்தி நிவாரணம் வழங்கக்கூடிய வகையில் நான்கு விடயங்களை உள்ளடக்கி அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு ஆண்டு கால அவகாசத்தையும் திருவாளர் சுமந்திரன் பெற்றுக்கொடுத்திருந்தார். அதற்கு அவர் அளித்த விளக்கத்தை நினைவு படுத்த விரும்புகிறோம்.

ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றுவது முக்கியமல்ல. அதனை இலங்கை அரசாங்கம் ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும். எனவே, நான்தான் அமெரிக்காவிற்கும் ஜெனிவாவுக்கும் இடையில் பறந்து இந்த கலப்புப்பொறிமுறை யோசனையை முன்வைத்தேன்.

இதனை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் கண்காணிப்புக்குள் தொடர்ந்தும் இருக்கும். அடுத்த இரண்டு வருடங்களில் இலங்கை அரசாங்கம் இதனை நிறைவேற்றாவிட்டால் ஐ.நா. கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று தெரிவித்திருந்தார். இதனை நானே முயற்சித்து கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளேன். எனவே இதன் வெற்றி தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் என்றும் சூளுரைத்திருந்தார்.

ஆனால் இலங்கை அரசாங்கம் எதனையும் நிறைவேற்றவில்லை. இருந்தபோதிலும் 2017ஆம் ஆண்டு அந்தத்தீர்மானத்தில் எத்தகைய மாற்றமுமின்றி 2019ஆம் ஆண்டுவரை இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் இரண்டாண்டு காலஅவகாசத்தை திருவாளர் சுமந்திரன் அவர்கள் எம் அனைவரின் எதிர்ப்பையும் மீறி பெற்றுக்கொடுத்திருந்தார். இதற்கு அவர் கூறிய விளக்கம்: அடுத்த இரண்டு மாதங்களில் புதிய அரசியல் யாப்பு வரவிருக்கிறது. அதில் ஈழம் என்ற வார்த்தையைத் தவிர, அனைத்துவிடயங்களும் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்று உறுதியளித்திருந்தார்.

இதே போன்று 2019ஆம் ஆண்டிலும் மேலும் இரண்டாண்டு கால அவகாசத்தை பெற்றுக்கொடுத்திருந்தார். இன்று அதன் பயனை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் அனுபவிக்கிறது.

ஓர் புதிய அரசியல் யாப்பை உருவாக்குகிறோம் என்ற பெயரில், நான்கரை வருடங்களாக அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இந்த அரசு தொடர்ந்து இருந்தால் மாத்திரமே புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டு வரமுடியும் என்ற அடிப்படையில், ஐ.நா. மனித உரிமை ஆணையகத்திலும் நாடாளுமன்றத்திலும் கடந்த நல்லாட்சி அரசை தொடர்ச்சியாகக் காப்பாற்றி வந்தனர். அதேசமயம், இந்த புதிய அரசியல் யாப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாவிட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டு தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்துவிடுவேன் என்றும் அரசியலிலிருந்து ஒதுங்கிவிடுவேன் என்றும் கூறியதுடன் அது நிறைவேற்றப்பட்டால் தனது கடமை முடிந்துவிட்டது என்ற அடிப்படையில் தான் அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்வேன் என்றும் திருவாளர் சுமந்திரன் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த அரசியல் யாப்பு தொடர்பான கருத்தாடல்களில் வட-கிழக்கு இணைப்பு இல்லை, சமஷ்டி இல்லை, பௌத்தத்திற்கு முதலிடம் என்பதிலும் எதுவித மாற்றமுமில்லை, ஆனால் அவை அனைத்தையும் எத்தகைய எதிர்ப்புமின்றி திருவாளர்கள் சுமந்திரனும் சம்பந்தனும் ஏற்றுக்கொண்டார்கள். இப்பொழுது அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வென்று புதிய அரசாங்கத்துடன் பேசி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்று புலுடா விடுகிறார்கள். இதனூடாக இவர்கள் விக்னேஸ்வரனை மட்டும் ஏமாற்றவில்லை. ஒட்டுமொத்த தமிழ் தேசிய இனத்தையே ஏமாற்றியுள்ளனர்.

மேற்சொன்ன விடயங்கள் அனைத்தும் யார் யாரை ஏமாற்றியுள்ளனர் என்பதற்கான சில சான்றுகள் மட்டுமே. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட பொழுதும், அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் சரியான தடத்தில் போகவில்லை என்று நாங்கள் கூறியபொழுதும் புதிய அரசியல் சாசனத்தை கொண்டுவராமல் ஏமாற்றுகிறார்கள் எனறு நாங்கள் எச்சரித்தபொழுதும் அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றும்கூட நீங்கள் நல்லாட்சி அரசு என்று பெயர்சூட்டிய அரசினால் நீங்கள் ஏமாற்றப்பட்டுள்ளீர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். மாறாக, சிங்கள ஆட்சியாளர்களைவிட விக்னேஸ்வரன்தான் உங்களை ஏமாற்றியதாக நீங்கள் குறிப்பிடுவதனூடாக எவ்வளவுதூரம் நீங்கள் ஆளும் வர்க்கத்தின் விசுவாசியாக மாறியுள்ளீர்கள் என்பதை வெளிப்படையாகக் காட்டியுள்ளீர்கள்.

தமிழ் மக்கள் உங்களது நடவடிக்கைகளையும் அறிக்கைகளையும் கூர்ந்து அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு உங்களது கருத்துகளை முன்வையுங்கள்.