எஸ்.பி.பி. மறைவு- சீனாவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு

இந்தியாவின் தலைசிறந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்கு சீனா தான் காரணம் எனத் தெரிவித்து அவருடைய ரசிகர் ஒருவர் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த மாதம் 25ம் நாள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணம் அடைந்தார்.

இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் தீவிர ரசிகரும் உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த  சீனிவாச ராவ், “கடந்த 8 மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் நம் நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்து விட்டது. கொரோனா வைரஸை உருவாக்கி பல நாடுகளுக்கு பரவச் செய்தது சீனாதான் என பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், இதுகுறித்து சீனா இதுவரை எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

ஏற்கெனவே அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளை பொருளாதார ரீதியாக வலுவிழக்கச் செய்ய வேண்டுமெனும் எண்ணம் சீனாவிற்கு உள்ளது. ஆதலால்தான் கண்ணுக்கு புலப்படாத நுண் உயிர் கொல்லியை உலகம் முழுவதும் சீனா பரவச் செய்துள்ளது.

இதனால்தான் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். எனவே சீனா மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.