எதியோப்பியாவில் சிக்கியிருந்த இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை

எதியோப்பியாவில் சிக்கியிருந்த 38 இலங்கையர்களை நாட்டுக்குள் அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதியோப்பியாவின் டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி (TPLF – Tigray People’s Liberation Front) மற்றும் எத்தியோப்பிய மத்திய அரசாங்கத்துக்கு இடையிலான பிரச்னை உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அங்குள்ள மெக்கெல்லி நகரில் இறுதி கட்ட இராணுவ நடவடிக்கையை அறிவித்திருக்கிறார் அந்நாட்டுப் பிரதமர் அபீ அகமது.

இந்த இராணுவ நடவடிக்கையின்போது, வரலாற்று சிறப்புமிக்க தலங்கள், மத வழிபாட்டுத்தலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் தாக்கப்படாது என்றும் அபீ அகமது கூறியிருக்கிறார்.

டீக்ரே போராளிகள் சரணடைய அரசு கொடுத்த அவகாசம் புதன்கிழமையோடு முடிந்துள்ள நிலையில், அங்குள்ள செல்போன், இன்டர்நெட் சேவைகள் என எல்லாமே துண்டிக்கப்பட்டு இருப்பதால், களத்தில் உள்ள தாக்குதல் நிலவரத்தை  உறுதிப்படுத்த இயலவில்லை என்று சர்வதேச செய்தி நிறுவனமான பிபிசி  தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எத்தியோப்பியாவில் யுத்த பிரதேசத்தில் சிக்கியிருந்த  இலங்கையர்கள் 38 பேரை ஐக்கிய நாடுகள் உதவியுடன் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.