உலகம் முழுவதும் கொரோனா தொற்றாளர் தொகை 50 இலட்சத்தை தாண்டியது; 3,25,000 பேர் மரணம்

உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை தாண்டியுள்ளதாக சர்வதேச கொரோனா தொடர்பிலான தகவல்களை வெளியிடும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி நேற்றிரவு வரையிலான தரவுகளின் அடிப்படையில், உலகளாவிய ரீதியில் 50 லட்சத்து 16 ஆயிரத்து 859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 25 ஆயிரத்து 563 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 5 மில்லியனுக்கும் அதிகமானோரில் சுமார் 19 லட்சத்து 79 ஆயிரத்து 673 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அறிய முடிகின்றது. எவ்வாறாயினும், 27 லட்சத்து 11 ஆயிரத்து 623 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற வரும் அதேவேளை, அவர்களில் 45 ஆயிரத்து 468 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

எஞ்சிய 26 லட்சத்து 66 ஆயிரத்து 155 பேரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக சர்வதேச கொரோனா தொடர்பிலான தகவல்களை வெளியிடும் இணையத்தளம் தெரிவிக்கின்றது. கடந்த சில வாரங்களாகவே ரஷ்யாவில் அதிகளவிலான கொரோனா தொற்றுக்குள்ளானோர் பதிவாகி வருகின்றனர்.

குறிப்பாக நேற்றைய தினம் ஆகும் போது ரஷ்யாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. நேற்றிரவு வரையான தரவுகளின் அடிப்படையில் 3 லட்சத்து 8 ஆயிரத்து 705 பேர் ரஷ்யாவில் பாதிக்கப்பட்டிருந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 2 ஆயிரத்து 972 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. ரஷ்யாவில் 2 ஆயிரத்து 300 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் 15 லட்சத்து 72 ஆயிரத்து 231 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், அவர்களில் 93 ஆயிரத்து 601 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 3 லட்சத்து 61 ஆயிரத்து 246 பேர் குணமடைந்துள்ளதுடன், 11 லட்சத்து 17 ஆயிரத்து 384 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஸ்பெயின், பிரேஸில், பிரித்தானியா, இத்தாலி ஆகிய நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அறிய முடிகின்றது. இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 819 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3 ஆயிரத்து 317 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.