உய்குர் முஸ்லிம்கள் பற்றிய கருத்துக்கள் தொடர்பாக கனடாவிற்கு சீனா கண்டனம்

உய்குர் முஸ்லிம்கள் தொடர்பாக கனடா போலியான தகவல்களை தெரிவிப்பதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “கனடா நாடாளுமன்றம் சீனாவின் ஸ்திரத்தன்மையை புறக்கணிக்கிறது. உய்குர் முஸ்லிம்கள் குறித்தும் சிறுபான்மையினர் குறித்தும் தவறான தகவல்களை கனடா நாடாளுமன்றம் பரப்புகின்றது.

சீனாவின் உள்விவகாரங்களில் கனடா தலையிடுகின்றது. இது கனடாவின் அறியாமையை பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உய்குர் மொழி பேசும் உய்குர் முஸ்லிம்கள், உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை மக்கள் வாழ்கின்றனர். சீனாவின் மற்ற மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த மாகாணத்தில் மட்டும் கட்டுக்குள் வரவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக முஸ்லிம்கள் சிறுபான்மைப் பிரிவினர் இடையே குழந்தைப் பேற்றைத் தடுக்க அத்துமீறும் செயல்களில் சீன அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று ஏ.பி. செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் அங்குள்ள மசூதிகளை சீனா இடிப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இதனையடுத்து உய்குர் முஸ்லிம்கள் தொடர்பாக உலக நடுகளிடையே எதிர்மறையான விமர்சனத்தை சீனா பெற்றது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்து வருகின்றது.