உயிர் அச்சுறுத்தல் காரணமாக மியான்மரில் இருந்து இந்திய மாநிலமான மிசோரம் மாநிலத்திற்கு வந்த அந்நாட்டுக் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மியான்மரில் கடந்த பெப்ரவரி முதலம் திகதி இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இராணுவத்துக்கு எதிராக அங்கு தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் 50-க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டு இருக்கின்றனர்.
இவ்வாறு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் மியான்மரில் இருந்து இந்திய மாநிலமான மிசோரமில் எல்லை தாண்டி வந்த காவல்துறையினரை அந்த மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இரு நாட்டு எல்லையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள லங்காவ் கிராமத்தில் சாதாரண உடையில் அவர்கள் இருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மியான்மர் இராணுவம் இட்ட கட்டளைகளை தாங்கள் நிறைவேற்றாததால், தங்களை இராணுவம் தேடுவதாகவும், எனவே இந்தியாவிடம் அடைக்கலம் பெறுவதற்காக எல்லை தாண்டி வந்ததாகவும் தெரிவித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இராணுவத்துக்கு பயந்து மியான்மர் காவல்துறையனர் இந்தியாவுக்குள் ஊடுருவிய விவகாரம் மிசோரமில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.