ஈ.பீ.ஆர்.எல்.எவ் இல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டேன்;கூட்டமைப்பில் இணைய விரும்புகிறேன்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஊடான தனது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் இரா.துரைரத்தினம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கட்சியின் காரியாலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “கட்சியின் பெயரை மாற்றம் செய்து புதுத் தலைமையை வடக்கில் உருவாக்குவதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கியவன் என்ற அடிப்படையில் கிழக்கில் வாக்குகள் பிரிபடக்கூடாது என்பதற்காக கடந்த காலத்தில் மாகாணசபை, நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து செயற்பட்டேன்.

எனவே, இவ்விடயத்தில் எதிர்காலத்திலும் நாடாளுமன்றம், மாகாணசபை, உள்ளூராட்சித் தேர்தல்களிலும் ஏனைய பொதுவான விடயங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பங்கு தாரர்களாக என்னையும் ஒரு குழுவாக இணைத்துக் கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கோரியுள்ளேன்.

இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து செயற்பட விரும்பியுள்ளதோடு இம்முடிவிற்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இம்முடிவுகளும் எனது தனிப்பட்ட முடிவுகளே.

35 வருடங்களுக்கும் மேலாக எல்லோருடனும் பொதுவாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் நன்றாகப் பழகியவன் என்ற அடிப்படையில் எனக்கும் கட்சியில் உள்ளோருக்கும் எவ்வித தனிப்பட்ட முரண்பாடுகளும் இல்லை என்பதோடு அனைவரும் சிறப்பானவர்கள். எனது தனிப்பட்ட உறவு அனைவருடனும் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.