ஈழத் தமிழர்களுக்கு மோடி உதவ வேண்டும் – மு.க.ஸ்டாலின்

இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவக் குவிப்புக்கும், தமிழ்ப் பெயர்களை அழிப்பதற்கும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ஸவை நல்வழிப்படுத்தி ஈழத் தமிழர்களுக்கு பிரதமர் மோடி உதவிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“பட்ட காலிலேயே படும்“ என்பதற்கமைய,  இனி துயரம் படமுடியாது. பட்டதெல்லாம் போதும் என்று, துன்ப துயரங்கள் அனைத்தையும் அனுபவித்துச் சோர்ந்து போயிருக்கும் ஈழத் தமிழர்களை, எடுத்த எடுப்பிலேயே, “இலங்கையில் தமிழர்கள் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் இனிமேல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள்” என்று அறிவித்துள்ளதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

புதிய அதிபர் கோத்தபயா ராஜபக்ஸ மற்றும் மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் பதவிப் பொறுப்பேற்ற ஈரம் காய்வதற்குள், தமிழர்களின் இதயங்களைக் காயப்படுத்தி, இந்தியாவின் அப்பாவி மீனவர்கள் மீதான தாக்குதலை அதிகரித்து இருப்பதுமான அநியாயம், உலகத் தமழர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

இலங்கையில் அமைந்துள்ள ராஜபக்ஸ குழுமத்தின் புதிய அரசில், தமிழர்களுக்கு நேர்ந்துள்ள இந்த நெருக்கடி குறித்து, மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து, அதன் எதிர்காலப் பரிமாணங்களை ஆழ்ந்து பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆவன செய்திட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, மிகுந்த அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

பிரதமர் மோடி அவர்கள் ஈழத் தமிழர்கள் பிரச்சினையை, கோத்தபயா ராஜபக்ஸ அவர்களிடம் உரிய முறையில் எடுத்துரைத்து, அவரின் உள்ளத்தின் ஓரத்தில் இருக்கும் தீணை அணைத்து, அவரை நல்வழிப்படுத்தி- நியாயப்படுத்தி ஈழத் தமிழர்களுக்கு உதவிடும் அக்கறையான நடைமுறையை மேற்கொள்ளப் பெரிதும் வலியுறுத்துவார் என நம்புகிறேன் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.