ஈரான் தளபதி சுலைமானீ கொலை சட்டவிரோதம் – அமெரிக்காவிற்கு ஐ.நா. கண்டனம்

ஈரான் இராணுவத் தளபதியான காசெம் சுலைமானியை அமெரிக்கா கொன்றது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உத்தரவிற்கமைய அமெரிக்கப் படைகள் ஈராக்கில் விமானத் தாக்குதலை மேற்கொண்டன. இந்தத் தாக்குதலில் ஈரானின் முக்கிய இராணுவத் தளபதியான காசெம் சுலைமானீ உட்பட 9பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தையடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட 35 பேர் மீது ஈரான் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த வாரம் அவர்களுக்கு பிடியாணை பிறப்பித்திருந்தது.

இதேவேளை சர்வதேச சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரான ஏக்னஸ் கேலமார்ட், தனது அறிக்கையை இன்று சமர்ப்பித்திருந்தார். அதில் அமெரிக்காவிற்கு எதிராக தாக்குதல் நடத்த சுலைமானீ திட்டமிட்டார் என்பதற்கான எந்தவித ஆதாரத்தையும் அமெரிக்கா வழங்கவில்லை. ஈரான் இராணுவத்தின் ராஜதந்திரங்களுக்குத் தலைமை தாங்கியவரான சுலைமானீ, சிரியா மற்றும் ஈராக்கில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தலைமை தாங்கியுள்ளார். அவரால் மற்றவர்கள் உயிர்களுக்கு ஆபத்து இல்லாத நிலையில், இது போன்ற தாக்குதலை அமெரிக்கா நடத்தியது சட்டத்திற்குப் புறம்பானது. எனவே இந்த ஆளில்லா விமானத் தாக்குதல் தன்னிச்சையாக நடத்தப்பட்ட கொலை என்பதால், சர்வதேச மனித உரிமைச் சட்டப்படி இதற்கு அமெரிக்கா தான் பொறுப்பு.

அத்துடன் இச்சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களும் சட்டத்திற்குப் புறம்பானவை தான் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் உள்துறை செய்தித் தொடர்பாளர் மார்கன் ஒர்டகஸ் கருத்துத் தெரிவிக்கையில், ஈரான் தளபதி சுலைமானீ உலகின் மோசமான பயங்கரவாதி என்பதை மறந்து இவ்வாறு அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை எழுதியது நேர்மையின்மையைக் காட்டுகின்றது. இது பயங்கரவாதிகளுகு்கு ஆதரவளிக்கும் அறிக்கை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.