இஸ்லாமிய மாநாட்டை நடத்த அனுமதிக்கக்கூடாது: ஞானசாரர் எச்சரிக்கை

இஸ்லாமிய மாநாட்டை சிறீலங்காவில் நடத்துவதற்கு அனுமதி வழங்கக்கூடாது எனவும் அதனை நிறுத்த வேண்டும் எனவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் வண. கலகொட அத்த ஞானசார தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார். சவுதிக்கு வேண்டியவாறு இந்த நாடு செயற்படத் தேவையில்லை. சவுதியின் செல்வாக்குக்கு உட்பட்டு இந்த நாடு இவ்வாறான தீர்மானத்தை எடுப்பதையிட்டு நாம் வெட்கப்பட வேண்டும் எனவும் தேரர் கூறினார்.

முஸ்லிம்களின் வாக்குகளுக்கு ஆசைப்பட்டு செயற்பட வேண்டாம் என இந்த நாட்டின் அரசியல் தலைவர்களிடம் நான் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் தேரர் மேலும் கூறினார். இம்மாநாட்டை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் கடந்த 14 ஆம் திகதி கண்டி தலதா மாளிகைக்குச் சென்று அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து தெளிவுபடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது