இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் 10ம் மாதம் 10ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 4 பெண்கள் 60 ஆண்களும் அடங்குகின்றனர். இதில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் உள்ளனர்.

இவர்களை குரான் பாடம் கற்பிப்பதாக கூறி நுவரெலியாவில் உள்ள வீடொன்றில் வைத்து சகரான் ஆயுதப் பயிற்சி வழங்கியதாக கூறப்படுகிறது.

இன்று(26) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் விசேட அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 10ம் மாதம் 10ஆம் திகதி வரையான விளக்கமறியல் வைக்க உத்தரவினை பிறப்பித்தார்.