ஐ.நா மனித உரிமை பேரவை தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியதன் மூலம் எமது தரப்பு நியாயங்களை சர்வதேச சமூகத்திடம் ஆணித்தரமாக முன்வைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டு வர முடியாது.
ஒருவேளை, பாதுகாப்புச் சபையினூடாக கொண்டுவந்தாலும் இலங்கைக்கு ஆதரவான நாடுகள் அதில் இருப்பதால் அதற்கு வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டை மீட்ட படைவீரர்கள் மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தும் வகையில் கடந்த அரசு ஜெனிவா யோசனைக்கு இணை அனுசரணை வழங்கியது.
உலகில் இவ்வாறு தமது நாட்டை காட்டிக் கொடுத்த முதல் நாடு இலங்கை தான். அதனை மங்கள சமரவீர செய்து வைத்தார்.
30 வருட கால யுத்தத்தில் கடைசி இரண்டு மூன்று வாரங்கள் குறித்தே பேசப்பட்டது. போர்க் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தலதா மாளிகை, காத்தான்குடி பள்ளி தாக்குதல் குறித்து எதுவும் பேசப்படவில்லை.
ஜெனிவா பிரேரணைக்கான இணை அனுசரணையானது முழு நாட்டு மக்களினதும் கன்னத்தில் அடித்தது போன்ற செயலாகும்.
யுத்த காலத்தில் நாம் தவறு செய்ததாகவும் அப்பாவி மக்களை கொலை செய்ததாகவும் நாமாக சர்வதேச சமூகத்திடம் ஒப்புக்கொண்டிருக்கிறோம்.
டயஸ் போராக்களின் அழுத்தத்தின் காரணமாக இந்த பொய்யை கடந்த அரசு ஏற்றுக் கெண்டது. இந்த பொய்யில் இருந்து மீண்டு உண்மையை நிலைநிறுத்த வேண்டும்.
2005/6 ல் புலிகளுடன் பேச்சு நடத்த முன்வந்தோம். ஆனால் தங்களை பலப்படுத்தவே அவர்கள் இதனை பயன்படுத்தினார்கள். இந்நிலையிலேயே இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையிலேயே இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இணை அனுசரணையிலிருந்து ஒதுங்கினாலும் பொறுப்புக் கூறலையும் நல்லிணக்கத்தையும் தொடர்வோம்.
எமது நாட்டின் இறைமையை பாதுகாக்கும் வகையில் சகல முன்னெடுப்புகளும் இடம்பெறும். உள்ளக பொறிமுறையின் கீழ் உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் கீழ் தேவையான முன்னெடுப்புக்களை செய்வதாக அறிவித்திருக்கிறோம்.
இதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று உகந்த வகையில் அமைக்கப்படும். தேர்தலின் பின்னர் துரிதமாக இந்த ஆணைக்குழு நிறுவப்படும்.
கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை ஆராய்ந்து தொடரும் வகையில் இந்த முன்னெடுப்பு அமையும் என்றார்.