இலங்கை ‘எல்ல’ காட்டுப் பகுதியில் காட்டுத் தீ

இலங்கையின் பிரதான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக ஊவா மாகாணத்திலுள்ள எல்ல பகுதி அமைந்துள்ளது. இயற்கையான மலைக்குன்றுகள், நீர்வீழ்ச்சிகள், குளுமையான வானிலை என உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை எல்ல வனப்பகுதி ஈர்க்கின்றது. இந்த காலநிலை எல்லோராலும் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

எனினும், எல்ல பகுதியிலுள்ள வனப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக தற்போது அது கேள்விக்குறியாகியுள்ளதாக அந்த பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எல்ல வனப் பகுதியில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக குறித்த பகுதியில் சுமார் 20 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.

இந்த வனப் பகுதியிலுள்ள இயற்கை மூலிகைகள், பெறுமதிமிக்க மரங்கள், செடிகள், இலங்கைக்கே உரித்தான உயிரினங்கள் என்பன அழிந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக மனித செயற்பாடுகள் காரணமாகவே இந்த தீ பரவியிருக்கக்கூடும் என சூழலியலாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

எல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயானது பெரும்பாலும் இயற்கையாக ஏற்பட்ட ஒன்றாக கருத முடியாது என காணி மற்றும் விவசாய அமைப்பின் சுற்றுச் சூழல் ஆலோசகரும், சூழலியலாளருமான சஞ்சீவ ஷாமீகர ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

ஈரவலய காடுகள் அடர்த்தி குறைந்ததாக காணப்படுவதால், காட்டுத்தீ ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவாக உள்ளதாக  அவர் தெரிவித்தார். 1998ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 8 வருடங்களில் மட்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இவ்வாறான காட்டுத்தீ சம்பவங்கள் பெரும்பாலும் மனித செயற்பாடு காரணமாகவே ஏற்படுகின்றன.

சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பிற்காகவும் காட்டு யானைகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்காகவும் காடுகளுக்குத் தீ வைக்கப்படுகின்றன.

ஜுலை – செப்டெம்பர் மாதங்களில் அதிகளவில் காட்டுத்தீ உருவாகின்றது. இந்தக் காலப்பகுதியில் ஏற்படும் மழை வீழ்ச்சியுடன் புதிய புற்கள் வளர்வதுடன், அது கால்நடைகளுக்கு சிறந்த உணவாகவும் அமைகின்றது. காடுகளிலுள்ள மூலிகை மற்றும் இயற்கை வளப் பொருட்களை பெறுவதற்காகவும், மிருகங்களை வேட்டையாடுவதற்காகவும் காடுகளுக்குத் தீ வைக்கப்படுகின்றது.

விநோத செயற்பாடுகளுக்காகவும் காடுகளுக்குத் தீ வைக்கும் சம்பவங்கள் கடந்த காலங்களில் அதிகரித்துள்ளன. குறிப்பாக சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பு மற்றும் காட்டு யானைகளின் பிரவேசத்தை கட்டுப்படுத்துவதற்காக அதிகளவிலான சந்தர்ப்பங்களில் காடுகளுக்குத் தீ வைக்கப்பட்டு வருகின்றது.

எல்ல பகுதியை எடுத்துக் கொண்டால், அதிகளவில் விநோத செயற்பாடுகளுக்காகவே காடுகளுக்குத் தீ வைக்கப்படுகின்றன. இது மிகவும் பாரதூரமான விடயமாகும். குறிப்பாக இலங்கையிலுள்ள இயற்கை காடுகளில் காட்டுத் தீ ஏற்படாது. இலங்கையில் பைனஸ் மரங்கள், எகேசியா மரங்கள், தேயிலை செடிகள் மற்றும் புற்தரைகள போன்றவற்றிற்கே இலங்கையில் அதிகளவில் தீ வைக்கப்படுகின்றது.

Sri Lanka forest fire2 இலங்கை ‘எல்ல’ காட்டுப் பகுதியில் காட்டுத் தீஎல்ல பகுதி என்பது ஊவா மாகாணத்திலுள்ள மரங்கள் மற்றும் புற்தரைகளை கொண்ட ஒரு பகுதியாகும். இந்த பகுதியில் தீ வைக்கப்பட்டுள்ளதாலேயே இந்த தீங்கு ஏற்பட்டுள்ளது. இது சுற்றுலாத்துறையை மட்டுமல்ல பல்வேறு துறைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எல்ல பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையின் தெரிவிக்கின்றனர். ஆனால் இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை