இலங்கை இந்திய கடற்படையினர் இணைந்து கூட்டு பயிற்சி

இலங்கை இந்திய கடற்படையினரின் மூன்றுநாள் கூட்டுப் பயிற்சி இன்று திருகோணமலையில் ஆரம்பமாகவுள்ளது.

மூலோபாய நலன்கள் குறித்த விடயத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் அதிகரிக்கும் ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தில் செயற்பாட்டு ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த கூட்டு ஒத்திகை அமைந்திருக்கும் என  தகவல் வெளியாகியுள்ளது.

வருடாந்த ஸ்லிம்நெக்ஸ் பயிற்சியே திருகோணமலையில் ஆரம்பமாகவுள்ளது, என தெரிவித்துள்ள அதிகாரிகள், இருநாடுகளினது கடற்படையினர் மத்தியிலான இயங்தளத்தை மேலும் வலுவானதாக மாற்றுவதற்காக விமான எதிர்ப்பு ஆயுதங்களை பரீட்சித்து பார்க்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய கடற்படை, நீர்மூழ்கிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தனது கடற்படை கப்பல்களான ஐஎன்எஸ் காமோத்திரா ஹில்டன் ஆகியவற்றை இந்த பயிற்சியின் போது பயன்படுத்தவுள்ளதாகவும் செட்டாக் ஹெலிக்கொப்டர்கள்,டோர்னியர் கடலோர ரோந்து விமானம் ஆகியவற்றையும் பயன்படுத்தவுள்ளது எனவும்   தெரியவந்துள்ளது.

அதே நேரம் இலங்கை கடற்படை தனது கடலோர ரோந்து கப்பலான சயுராவையும்,கஜபாகு பயிற்சி கப்பலை ஈடுபடுத்தவுள்ளது. இந்த தொடர் பயிற்சி இருநாடுகளுக்கும் இடையிலான ஆழமான ஈடுபாட்டை எடுத்துக்காட்டுகின்றது என இந்திய கடற்படைதெரிவித்துள்ளது.