இராமேஸ்வரம், அழகன்குளத்தில் ஈழக்காசு, திருவிதாங்கூர் காசுகள் கண்டெடுப்பு – இராஜராஜசோழன் வெளியிட்டவை

தமிழகம் இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் நடத்திய தொல்லியல் ஆய்வில் ஒரு வீட்டில் இராஜராஜசோழன் காலத்தில் வெளியிடப்பட்ட ஈழக்காசு, இந்திய, இலங்கை, இங்கிலாந்து வெள்ளி காசுகள், உட்பட பல நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அழகன்குளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், வழக்கறிஞருமான அசோகனின் முன்னோர்கள் வெளிநாடுகளில் வணிகம் மேற்கொண்டுள்ளனர். அவரின் பூர்வீக வீட்டிலேயே பழைய பெட்டியில் இந்த நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் இராஜராஜசோழன் காலத்தில் பயன்படுத்திய ஈழக்காசு, இந்திய, இலங்கை, இங்கிலாந்து நாட்டு வெள்ளி, செப்புக் காசுகள், திருவிதாங்கூர் சமஸ்தானம் வெளியிட்ட வெள்ளிக் காசு என்பன முக்கியமானவை.

இந்தக் காசுகள் பற்றி இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவத்தின் தலைவர் வே.ராஜகுரு கருத்துத் தெரிவிக்கையில்,

இங்கு கிடைத்த ஈழக்காசு முதலாம் இராஜராஜசோழன் இலங்கையை வென்ற பின்னர் வெளியிட்ட காசு ஆகும். இது ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்தக் காசின் ஒரு பக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, நான்கு பந்துகள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும், கீழே மலரும் உள்ளன. திரிசூலம், விளக்கும் உள்ளன. மறுபக்கம் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்கிறார். தேவநாகரி மொழியில் ‘ஸ்ரீ ராஜ ராஜ‘ என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இதில் உள்ள மனிதன் இலங்கை காசுகளில் உள்ள உருவத்தை போல உள்ளான்.

இலங்கையை சோழர்கள் வென்ற பின் அந்நாட்டின் பயன்பாட்டில் வெளியிடப்பட்ட ஈழக்காசு, முதலாம் இராஜராஜ சோழன் காலம் முதல் முதலாம் குலோத்துங்க சோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்தக் காசுகள் பொன், வெள்ளி, செம்புகளில் வெளியிடப்பட்டுள்ளன. செப்பினால் செய்யப்பட்ட ஈழக்காசு ஈழக்கருங்காசு எனப்படுகின்றத. ஈழக்காசுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், தொண்டி, திருப்புல்லாணி ஆகிய கடற்கரை ஊர்களிலும் கிடைத்துள்ளன. தற்போது அழகன்குளம் பகுதிகளிலும் இக்காசுகள் கிடைத்துள்ளன.

இதன் மூலம் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட ஈழக்காசுகள் சோழர்களின் ஆளுகையின் கீழ் இருந்த பாண்டிய நாட்டுப் பகுதிகளிலும் பயன்பாட்டில் இருந்ததை அறிய முடிகின்றது.

இலங்கை காசுகளில் தமிழ், சிங்களத்தில் சதம் என எழுதப்பட்டுள்ளது. இவை 1929முதல் 1944 வரையிலான காலத்தில் வெளியிடப்பட்ட செப்புக் காசுகள் ஆகும். இதில் இலங்கையில் அதிகம் காணப்படும் தாளிப்பனை என்னும் மரத்தின் படம் உள்ளது. தற்போதும் இலங்கையில் பணத்தாள்களில் தாளிப்பனையின் படம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, விக்டோரியா மகாராணி, ஐந்தாம், ஆறாம் ஜோர்ஜ் மன்னர் ஆகியோர் காலத்து வெள்ளி நாணயங்களும், ஏழாம் எட்வேட் மன்னர் 1909இல் வெளியிட்ட கிரேட் பிரிட்டனில் பயன்பாட்டில் இருந்த பென்னி நாணயமும் உள்ளன.

shola coin 2 இராமேஸ்வரம், அழகன்குளத்தில் ஈழக்காசு, திருவிதாங்கூர் காசுகள் கண்டெடுப்பு - இராஜராஜசோழன் வெளியிட்டவைபல நூற்றாண்டுகளாக அழகன்குளத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கை, இங்கிலாந்து, திருவிதாங்கூர் ஆகிய வெளிநாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை இங்கு கண்டுபிடிக்கப்பட்ட காசுகளின் மூலம் அறிய முடிகின்றது. இதேபோல் இம்மாவட்டத்தைச் சேர்ந்தபலர் ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் குடியேறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது என வே.ராஜகுரு கூறினார்.

இந்த அகழாய்வு மூலம் 2400 ஆண்டுகளுக்கு முன்பே உலகின் பல்வேறு நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த துறைமுகமாகவும், வணிக மையமாகவும் இந்தப் பிரதேசம் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு கண்டு பிடிக்கப்பட்ட காசுகள் மூலம் இவ்வூரின் வெளிநாட்டு வணிகத் தொடர்புகள் சமீப காலம் வரை இருந்துள்ளது என நிரூபிக்கப்படுவதாக அறிய முடிகின்றது.