இராணுவ தற்காப்பு கலைக்கிராமம் கிளிநொச்சியில் திறப்பு

இராவண தற்காப்பு கலைக்கிராமம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. இக்கிராமம் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் என். யூ.எம்.டபிள்யூ. சேனநாயக்காவினால் திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்தில் குறித்த மாதிரி தற்காப்பு கலைக்கிராமம் வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரியவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தற்காப்புக் கலையினை அழியவிடாது அதனைப் பேணிப் பாதுகாக்கும் நோக்குடன் கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தினால் படையினருக்கு தற்காப்புக் கலை முதற்கட்டமாக வழங்கப்பட்டது.

குறித்த பயிற்சியின் நிறைவாகவும், கலை பாரம்பரியத்தினை பேணிப் பாதுகாக்கும் நோக்குடனும் இரணைமடுவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் குறித்த தற்காப்புக் கலைக் கிராமம் படையினரால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் போது பண்டைக்கால அரசாட்சி முறையில் எவ்வாறு தற்காப்புக் கலை பேணப்பட்டமை என்பதை பிரதிபலிக்கும் வகையில் விசேட  நிகழ்ச்சியும் நடைபெற்றது.