கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் உடலை கிளிநொச்சி – இரணைதீவுப் பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அத்தோடு இந்தத் தீர்மானத்துக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் இரணைதீவு அருட்தந்தை தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சகோதரர்களால் பல்வேறு பகுதிகள் முன்மொழியப்பட்டபோதும் அவற்றைத் தவிர்த்து, பல இன்னல்கள் மற்றும் பல கட்ட போராட்டங்களின் பின்னர் 2017 ஆம் ஆண்டு மீள்குடியேறிய இந்தப் பகுதியை தெரிவு செய்தமை கவலையளிப்பதாக இரணைதீவு அருட்தந்தை குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் இரணைதீவு பகுதியானது நீரேந்துப் பிரதேசமாகக் காணப்படுவதால் கொரோனா தொற்றுள்ள உடல்களை புதைப்பதால் நீர் ஊடாக தொற்று பரவ வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மைக் காலமாகவே இரணைதீவு மக்கள் குடியேறி படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் இந்த முடிவை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் இரணைதீவு அருட்தந்தை தெரிவித்துள்ளார்.
தற்போது 165 குடும்பங்கள் அட்டைப் பண்ணைகளை அமைத்து அங்கு வசித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அருட்தந்தை குறிப்பிட்டார்.
இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து இரணைதீவில் ஜனாசா புதைப்பு விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
இன்று காலை 11 மணியளவில் பூநகரி பிரதேச செயலகத்திற்கு சென்ற குழுவினர் அங்கு திட்டமிடல் பணிப்பாளரிடம் குறித்த மகஜரை கையளித்தனர்.
மன்னார் சமூக மேம்பாட்டு அபிவிருத்தி நிறுவனம், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இரணைதீவு மக்கள் இணைந்து குறித்த மகஜரை கையளித்துள்ளனர்.
கோவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பிரதேசம் பொருத்தமற்ற பிரதேசம் என்பதை விளங்கிக்கொண்டு அரசாங்கம் அதற்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற விடயம் குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.