‘இப்போது இல்லைனா எப்போதும் இல்லை’-ரஜினி  கருத்து

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றதேர்தலில் போட்டியிட ஏதுவாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தமது அரசியல் கட்சியை தொடங்கவிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்,

கடந்த 2017ம் ஆண்டில், அரசியலுக்கு வருவேன் எனக்கூறியிருந்தேன். பார்லிமென்ட் தேர்தலில் முடிவு செய்யவில்லை. சட்டசபை தேர்தல் நெருங்குவதற்கு முன்னால் கட்சி ஆரம்பித்து, 234 தொகுதிகளில் போட்டியிடுவேன் என கூறியிருந்தேன். மக்கள் மத்தியில் எழுச்சி வரணும். எழுச்சியை உண்டாக்க வேண்டும். அதன் பிறகு தான் கட்சி ஆரம்பித்து, தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் செய்ய திட்டமிட்டிருந்தேன். ஆனால் கொரோனாவால் முடியவில்லை. எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது உங்களுக்கு தெரியும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், சுற்றுப்பயணம் செல்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

நான் பிரசாரம் செய்ய முடியும் என சிந்தித்தேன். தமிழக மக்கள் பிரார்த்தனை, வேண்டுதலால் ஒருமுறை உயிர் பிழைத்துவந்தேன். இப்போது, அவர்களுக்காக என் உயிரே போனால் கூட என்னை விட சந்தோஷப்படுபவர் வேறு யாரும் கிடையாது. நான், எப்போதும் கொடுத்த வாக்கை என்றைக்கும் காப்பேன்.

அரசியல் மாற்றம் ரொம்ப கட்டாயம். அது காலத்தின் தேவை. அரசியல் மாற்றம் வந்தே ஆக வேண்டும். நிச்சயம் மாற்றம் பிறக்கும். நான் வந்த பிறகு, நான் வெற்றியடைந்தால், மக்களுடைய வெற்றி. நான் தோல்வியடைந்தால் மக்களுடைய தோல்வி. மாற்றத்திற்கு எல்லாரும் துணையாக நிற்க வேண்டும். எல்லாத்தையும் மாற்ற வேண்டும். கடினமாக உழைத்து நம்மால் என்ன முடியுமோ அதை செய்து, எனது பாதையில் வெற்றியடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அண்ணாத்த படத்தை முடித்து கொடுப்பது என் கடமை. அது முடித்துவிட்டு கட்சி பணியை ஆரம்பிப்பேன்.

ஒவ்வொரு நாட்டிறகும் தலையெழுத்து உள்ளது . தமிழக தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. அது நிச்சயம் நடக்கும். ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் இப்போது இல்லைனா எப்போதும் இல்லை. மாற்றுவோம் எல்லாத்தையும் மாற்றுவோம்” என்றார்.