இந்திய படையினரால் கொல்லப்பட்ட என் மகனுக்கு நீதிவழங்குங்கள் – காஸ்மீர் தந்தையின் கதறல்

காஸ்மீரில் இந்திய படையினரின் தாக்குதலில் 18 வயது இளைஞன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி வழங்கப்படவேண்டும் என இளைஞனின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய படையினருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாத போதிலும் இளைஞன் மீது பெல்லட் குண்டுதாக்குதலும் கண்ணீர்புகைபிரயோகமும் மேற்கொள்ளப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ள நிலையிலேயே மகனின் மரணத்திற்கு நீதி வழங்கப்படவேண்டும் என தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரு மாத காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஸ்ரார் அகமட் கான் தனது கடந்த வாரம் தனது 18வது பிறந்த நாளிற்கு 11 முன்னதாக மருத்துவமனையில் மரணமடைந்துள்ள நிலையிலேயே தந்தை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் எறிந்த கல்பட்டே இளைஞன் காயமடைந்தான் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும் இளைஞனின் உறவினரான மற்றொரு இளைஞன் அவ்வேளை கல்எறியும் சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளான்.

இதேவேளை பெல்லட் குண்டுதாக்குதலே இளைஞனின் மரணத்திற்கு காரணம் என்பதை உறுதி செய்யும் ஆவணங்களை குடும்பத்தினர் சமர்பித்துள்ளனர்.

இந்திய பாதுகாப்பு படையினரின் தாக்குதல் காரணமாகவே இளைஞன் உயிரிழந்தான் என்பதற்கான ஆதாரங்களை இந்திய ஊடகங்கள் பலவெளியிட்டுள்ளன.

ஸ்ரீநகரின் புறநகர் பகுதியிலுள்ள பூங்காவொன்றில் அஸ்ரர் விளையாடிக்கொண்டிருந்தவேளையே தாக்கப்பட்டான் என நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

எட்டு வாகனத்தொடரணியில் வந்த இந்திய படையினர் அருகில் உள்ள பகுதிக்கு சென்றனர் இருவர் பூங்காவின் வாசலில் நின்றனர்,பின்னர் அவர்கள் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டனர் அதன் காரணமாக அஸ்ரர் நிலத்தில் விழுந்தவேளை அவன மீது பெல்லட் துப்பாக்கி குண்டு தாக்குதல் இடம்பெற்றது என அஸ்ரரின் இரு நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே தனது மகனின் படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என இளைஞனின் தந்தை பிர்டோஸ் அகமட் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய அரசாங்கம் பொய் சொல்கின்றது என அவர் குற்றம்சாட்டியுள்ளார். எனது மகன் கல்லால் தாக்கப்படவில்லை அவர்கள் அவனை சுட்டுக்கொன்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்