இந்தியாவில் இருந்து வெளியேறிய மாசுக் காற்று மட்டக்களப்பையும் தாக்கியது

காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப செயற்படும் வகையில் சூழலை மாற்றும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டியுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் 25வது அமர்வு நேற்றைய தினம் (07) மாநகரசபை மண்டபத்தில் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

இவ்வமர்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர், பொறியியலாளர், கணக்காளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மாநகரசபை சம்பிரதாய முறையில் ஆரம்பிக்கப்பட்ட சபை அமர்வில் தொடர்ந்து முதல்வரின் அறிவிப்புகள், நிதிக்குழுவின் சிபாரிசுகள், முதல்வரின் முன்மொழிவுகள்இ மாதாந்த கணக்குக் கூற்று தொடர்பிலான ஆராய்வுகள், மாநகரசபையினால் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற செயற்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் சில தினங்களாக பனிப்பொழிவு என நம்பப்பட்டது காற்று மாசடைந்த நிலையென அறியப்பட்டள்ளதாகவும் இது இந்தியாவில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய கழிவுகள் காற்றின் ஊடாக மட்டக்களப்பினையும் தாக்கியுள்ளதாகவும் இதன்போது மாநகர முதல்வர் தெரிவித்தார்.

அதற்கு அமைய எதிர்காலத்தில் காலநிலைக்கு ஏற்றவாறு சூழலை மாற்றியமைக்கவேண்டிய தேவையிருப்பதாகவும் பலதரப்பட்ட தரப்பினரையும் இணைத்து அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று
ஊடாக செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் முதல்வர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.