அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக இந்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை மக்கள் தேசிய கட்சியின் ஏற்பாட்டில், என்.விஸ்வகாந்தன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றதுடன் இதில் சிலர் கலந்துகொண்டனர்.
அபிவிருத்தி திட்டங்களுக்காக அமெரிக்கா வழங்கும் 480 மில்லியன் டொலர் மானியம் தொடர்பான ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.
இதனையடுத்து இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக பலரும் எதிர்ப்பு வெளியிட்டனர். இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக உடன்பாட்டில் கையெழுத்திடப்படாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் காலம் என்பதால் பல சிறிய கட்சிகளை பெரும் அரசியல் கட்சிகள் இந்த போராட்டங்களில் ஈடுபடுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
—