ஆலயங்கள் மீதான பௌத்தமயமாக்கலை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம்

இந்து சமய ஆலயங்கள் மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பௌத்தமயமாக்கலை கண்டித்து எதிர்வரும் 03ஆம் திகதி காலை 9மணி தொடக்கம் 10மணிவரை நல்லை ஆதீனம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

சமீப காலமாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் அமைந்துள்ள இந்து ஆலயங்களான வெடுக்குநாரி சிவன் கோவில், கன்னியா பிள்ளையார் ஆலயம், கந்தப்பிள்ளை விநாயகர் ஆலயம் போன்றவையும், திருக்கேதீஸ்வர ஆலய வளைவு பிற மதத்தவர்களால் அழிக்கப்பட்டு, உடைக்கப்பட்டு வருவதாலும் பௌத்தர்கள் வாழாத பிரதேசங்களில் விகாரைகள் அமைப்பதும் இலங்கை வாழ் இந்துக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த செயல்களை கண்டித்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் எதிர்வரும் சனிக்கிழமை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரமச்சாரிய சுவாமிகள் தலைமையில் நல்லை ஆதீன முன்றலில் இந்து அமைப்புக்களின் ஒன்றியமும் இந்து சமயப் பேரவையும் இணைந்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த அமைதிவழி செயற்பாட்டில் அனைத்து இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலய அறங்காவலர், உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள், ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் தவறாது கலந்து கொண்டு இந்துக்களின் மனஉணர்வுகளை வெளிப்படுத்தி வன்முறையாளர்களின் அத்துமீறல்களை அவர்களுக்கு உணர்த்த முன்வருமாறு  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.