ஆறு நாட்கள் தொடர்ந்து எரியும் கலிபோர்னியா காட்டுத்தீ

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் பெர்னான்டோ பள்ளத்தாக்கில் தொடர்ந்து ஆறாம் நாளாக காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்து வருகின்றது.

கடந்த 6 நாட்களுக்கு முன்பு தெற்கு கலிபோர்னியாவில் சான் பெர்னான்டோ பள்ளத்தாக்கில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தீப்பிடித்தது. அந்தத் தீ நேற்று பெருமளவில் பரவியதாக கூறப்படுகின்றது. இந்தத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 14000 தீயணைப்பு வீரர்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானங்களில் இருந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து வருகின்றனர்.

அப்பகுதியில் தற்போது தொடர்ந்து பலமான காற்று வீசி வருவதால் தீயை அணைப்பது வீரர்களுக்கு கடும் சவாலாக இருந்து வருகின்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் ஒரு இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். ஆயினும் 76 வீடுகளும், 31 கட்டிடங்களும் காட்டுத் தீயில் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்தத் தீயால் 7 ஆயிரத்து 542 ஏக்கர் நிலப்பரப்பு சாம்பலாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகின்றது. கலிபோர்னியா வரலாற்றில் மிகப் பெரும் காட்டுத்தீ விபத்தாக இது பதிவாகியுள்ளது. தீணை அணைக்க கிட்டத்தட்ட 14,000 தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த காட்டுத்தீ விபத்தை முன்னிட்டு லொஸ் ஏஞ்சல்ஸ், லாஸ்வேகாஸ் உட்பட்ட நகரங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது.