ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்பனமாக தோற்றமளித்தார் ஆயர் இராயப்பு ஜோசப் – ஹக்கீம்

பொதுவாக வன்னி பெருநிலப்பரப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போர்ச் சூழலிலும், போர் ஓய்ந்த பின்னரும் அயராது பாடுபட்ட மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் சங்கைக்குரிய இராயப்பு ஜோசப் , ஆட்சியாளர்கள் யாராக இருந்தபோதிலும் அவர்களுக்கு சிம்மசொப்பனமாகத் தோற்றமளித்தார் என அன்னாரது மறைவையொட்டி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உ றுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ,அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடக்கில், கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களுக்காக மட்டுமல்லாது, இந்து, முஸ்லிம் ,பௌத்த மக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்விலும் அன்னாருக்கு அக்கறை இருந்தது.

நான் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் உத்தியோகபூர்வமாகவும், எதிர்கட்சியிலிருந்த காலத்தில் உத்தியோகமற்ற விதத்திலும் மன்னாருக்குச் சென்ற சந்தர்ப்பங்களில் மறைந்த முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களுடன் அங்குள்ள செயலகத்திலும்,ஆலய இல்லத்திலும் மனம் திறந்து உரையாடும் வாய்ப்புகள் கிடைத்தன.

நான் நீதியமைச்சராக இருந்தபோது எனது அமைச்சுக்கே நேரில் வருகை தந்து தனது பிராந்தியத்தில் வசிக்கும் மக்கள் சட்ட ரீதியாக எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுத் தருமாறு வேண்டிக் கொண்டது இப்பொழுதும் மனக் கண் முன் நிழலாடுகின்றது.

தமிழ் மொழிக்கு அப்பால், ஆங்கில மொழிச் சொல்லாட்சியிலும், இலக்கணத்திலும், உச்சரிப்பிலும் அன்னாருக்கு இருந்த அபார ஆற்றலைக் கண்டு நான் வியந்திருக்கின்றேன்.

தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட சமயப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் அவரிடம் காணப்பட்ட அதே கரிசனை ஆன்மீக வாழ்வில் போலவே, உலகாயத வாழ்விலும் பரிணமித்துப் பிரதிபலித்தமை அன்னாரிடமிருந்த சிறப்பம்சமாகும்.

காணாமல் போனவர்களின் நெருங்கிய உறவினர்கள் அனுபவிக்கும் துன்ப, துயரங்களை தாமும் அனுபவிப்பதாக என்னிடம் கூறியிருக்கின்றார். மறைந்த ஓய்வு நிலை மறைமாவட்ட ஆயரின் மறைவிற்கு தனிப்பட்ட முறையிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.”