அரச காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு ஆவணங்கள் வழங்க நடவடிக்கை

ஆவணங்கள் எவையுமின்றி அரச காணிகளை அபிவிருத்தி செய்து அல்லது அவற்றில் குடியிருந்துவரும் மக்களுக்கு அக்காணிகளுக்கான சட்ட ரீதியான ஆவணங்களை வழங்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை கம்பஹா மற்றும் கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்காக விண்ணப்பிப்பதற்குரிய மாதிரி விண்ணப்பப்படிவம் மற்றும் வழிகாட்டுநெறிகளை உள்ளடக்கிய மேற்படி வர்த்தமானி அறிவித்தல் காணி ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் இம்மாதம் 30ஆம் திகதி (2020/09/30) வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

பயனாளிகளைத் தெரிவுசெய்வதற்கான காணிக் கச்சேரி 2020.11.01 ஆம் திகதியில் இருந்து 2020.11.21ஆம் திகதிக்கிடையில் இயைபுடைய பிரதேசத்தின் பிரதேச செயலாளர் தீர்மானிக்கின்ற திகதியில் நடத்தப்படும் எனவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் சமூக மட்டத்தில் செயற்பட்டுவரும் பொது நிறுவனங்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள், இதற்காக விண்ணப்பிக்க தகுதியுடைய மக்களை அறிவூட்டுவது பயனளிப்பதாக அமையும்.

இதனிடையே, சிறீலங்கா அரசின் இந்த திட்டமானது தமிழ் மக்களின் பிரதேசங்களில் பலவந்தமாக குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு காணிகளின் உரிமத்தை வழங்குவதற்கு வழி ஏற்படுத்தும் என்பதால் தமிழ் மக்களின் பிரதேசங்கள் மற்றும் எல்லைக்கிராமங்களில் அதிகளவில் தமிழ் மக்களை குடியேற்றும் நடவடிக்கைகளை தமிழ் மக்களும், புலம்பெயர் தமிழ் சமூகமும் மேற்கொள்ள வேண்டும் என அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

land அரச காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு ஆவணங்கள் வழங்க நடவடிக்கை