அரசு தனிவழி. ஈழத்தமிழர் எவ்வழி

சிறீலங்காவில், சிறீலங்காப் பொதுஜன பெரமுனவிற்குப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைத்ததை அடுத்து, அரசு சிங்கள பௌத்த பேரினவாதத்தையே இலங்கைத் தீவின் ஆட்சியாக மாற்றும் தனிவழிப் பயணத்தை அனைத்துலக நாடுகளுக்கோ அமைப்புக்களுக்கோ எவ்வித அச்சமுமின்றித் தொடங்கி விட்டது. ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்று வெளிப்படையாக அரசை நடுநிலையற்றதாக்கும் பிரகடனத்தைச் செய்தும் விட்டது.

இந்த ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற பிரகடனம் பொதுவாக சட்டத்தின் ஆட்சியில் சுதந்திரமான நிர்வாகம், சமத்துவமான சட்ட அமுலாக்கம் என்பன உள்ள நிலையில்தான் சட்டப் பாதுகாப்பை அனைவருக்கும் ஏற்படுத்தி வளர்ச்சிகளை வேகப்படுத்தும். ஆனால் சிறீலங்கா தமிழ் இன அழிப்பினை நடாத்திய நாடாக மட்டும் அல்லாது இன்றும் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லையெனவும், உலகெல்லாம் நன்கு அறியப்பட்ட இனப்பிரச்சினையையே இல்லையெனவும் கூறும் நிலையில், இப்பிரகடனம் நேரடியாக ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சிறீலங்கா அரசின் அச்சுறுத்தலாகவே அமைகிறது.

எவ்வாறு இப்பிரகடனம் ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளுக்கு எதிரானதாகிறது?

01. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக பிரித்தானிய காலனித்துவ காலம் வரை இலங்கையின் வடக்குஇ கிழக்கு மாகாணங்கள் முழுவதையும் ஓரே மக்களினத்தின் தேசமாகத் தனியரசுஇ சிற்றரசு முறைகள் வழி தங்கள் தாயகமாக கொண்டிருந்த ஈழத்தமிழ்த் தேச இனத்தின் தாயக உரிமையாம் இறைமையின் தொன்மையையும் தொடர்ச்சியையும் மறுக்கிறது

02. ஈழத்தமிழ் மக்களின் தேசிய தன்னாட்சி உரிமைகளை அடக்கி ஆளுகிறது

03. ஈழத்தமிழர்களுக்கு சிறீலங்காவின் அரசியலமைப்பில் பெயரளவில் உள்ள உரிமைகளும் கூட இல்லாத அரசியலமைப்பை உருவாக்க வழிகாட்டுகிறது.

04. ஈழத்தமிழர்களைத் தேச இனம் என்னும் அவர்களின் இயல்பு நிலையில் நின்று பௌத்த சிங்கள நாட்டில் வாழும் ஒரு சமூகத்தினர் என்னும் உண்மைக்கும், இயற்கைக்கும் மாறான ஒரு புதிய நிலைக்குத் தள்ளி, அடிமைப்படுத்தி இரண்டாந்தரக் குடிகளாக்குகிறது.

06. இலங்கைத் தீவின் ‘இறைமையுள்ள மக்கள்’ என்ற அடிப்படையில் தம்மைப் பாதுகாக்குமாறும் தமக்கான அமைதியையும், வளர்ச்சிகளையும் உறுதிப்படுத்துமாறும், உலக நாடுகளிடமும், உலக அமைப்புக்களிடமும், அனைத்துலகச் சட்டத்தின் கீழ் கோருவதற்குள்ள ஈழத்தமிழர்களின் வெளியக சுயநிர்ணய உரிமையினை இல்லாமலாக்குகிறது

07. ஈழத்தமிழ் மக்களை தேச இனம் அல்ல; சமூகம் என்ற நிலைக்கு மாற்றுவதன் மூலம் புலம்பெயர் ஈழத்தமிழர்களால், அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்ப, ஈழத் தமிழர்களை இனஅழிப்பில் நின்று பாதுகாக்குமாறும், அதீத மனிதாய தேவைகளில் உள்ள அவர்களுக்கு சிறீலங்காவின் இறைமையை மீறி மனிதாய உதவிகளைச் செய்யுமாறும் கேட்பதற்குரிய அனைத்துலக சட்ட உரிமைகளை இல்லாததாக்கி ஈழத்தமிழர்களைத் தனிமைப்படுத்தி அடக்கி ஆளுதலை இலகுபடுத்துகிறது.

தமக்குக் கிடைத்துள்ள பாராளுமன்ற அறுதிப் பெரும்பான்மையாலும், தங்களுக்கு எதிராக மக்கள் எழாதவாறு படையினரையே கொண்டு தங்கள் நிர்வாகத்தை நிறுவி விட்டதாலும், உலக அரசுக்கள் உலக அமைப்புக்கள் தங்களை பலமான அரசாக (ளுவசழபெ ளவயவந) கருதும் என சிறீலங்கா நம்புகிறது.

இதனால் உலக நாடுகள், உலக அரசியலில்இ இலங்கைத் தீவின் இந்துமா கடல் முக்கியத்துவம் கருதி, அவர்களின் சந்தை மற்றும் இராணுவ நலன்களுக்கே முன்னுரிமை கொடுத்து, சிறீலங்காவுடனான சமகால உறவைத் தக்க வைத்தல் என்னும் தந்திரேபாயத்திற்கே முதன்மை அளித்து தமது அரசை அனைத்துலக மட்டத்தில் ஏற்று அமைதி காப்பர் என்பது சிறீலங்கா அரசின் வெளியுறவு குறித்த எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நம்பிக்கை காரணமாகச் சிறீலங்கா தனது தனிவழியில் ஈழத்தமிழரை இலகுவாக முற்றிலும் அடிமைப்படுத்தி விடலாம் என உறுதியாகச் செயற்படத் தொடங்கி விட்டது.

இந்நிலையில் ஈழத்தமிழர்கள் எவ்வழி சென்று இதனை முறியடிக்கலாம்?

ஒற்றுமையாக ஒரே அணியில் செயற்படுவது ஒன்றே ஒரே வழி. கூடவே இன்றைய அரசின் ‘ஒரேநாடு ஒரே சட்டம்’ கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் உடனும் பொதுப்பிரச்சினை என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். புலத்துத் தமிழர்களும் ஒன்றிணைந்து தாயகத் தமிழர்களுக்குப் பக்கத்துணையாக வேண்டும். காலந்தாழ்த்தாது உடனடியான செயற்பாடுகள் முக்கியமாகின்றன.