அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் மஹிந்தவை சந்திக்கிறார் சுமந்திரன்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக இன்று இரவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சந்தித்துப் பேச்சுவார்தை நடத்தவுள்ளதாக ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

இன்று இரவு 7.30 மணியளவில் அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் மஹிந்தவைச் சந்தித்துப் பேசியிருந்தது. இதன்போது சுமந்திரன் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.

இதன்போது, தற்போது சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் பட்டியல் ஒன்றைத் தனக்குத் தருமாறு பிரதமர் சுமந்திரனிடம் கோரினார். அதற்கு சுமந்திரனும் சம்மதம் தெரிவித்தார். அந்தப் பட்டியலைத் தற்போது தான் தயாரித்துள்ளார் என்றும், அதனை இன்று இரவு 7.30 மணியளவில் பிரதமரை நேரில் சந்தித்து வழங்கவுள்ளார் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கின்றது.