அரசியல் கைதிகளை விடுவிப்பதன் மூலம் மைத்திரி தமிழ்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் – சிவாஜிலிங்கம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 16ஆம் திகதி இரவிற்கு முன்னரேனும் அரசியல் கைதிகளை விடுதலை செய்து, சிறுபான்மை சமூகத்திற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதியாக மாத்திரம் செய்யக்கூடிய விடயங்கள் உள்ளன. அதனையே நாம் வலியுறுத்தியுள்ளோம். இலங்கையின் சட்டப்படி மரணதண்டனை விதிக்கப்பட்டால், அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகின்றது. ஆயுள் தண்டனை என்பது 20 வருடங்கள் ஆகும். இந்த 20 வருடங்களில் விடுமுறைகள் போக 14 வருடங்களில் அவர்களின் தண்டனை முடிவடையும்.

எனவே 15 வருடங்களாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை எதிர்வரும் 16ஆம் திகதி இரவிற்கு முன்னரேனும் மைத்திரிபால சிறிசேன விடுதலை செய்து. சிறுபான்மை சமூகத்திற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும்” எனவும் தெரிவித்தார்.