அரசாங்கம் தமிழீழ கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளது – மனோ கணேசன்

தேசிய சுதந்திர தின நிகழ்வில் அரசாங்கம், தமிழில் தேசிய கீதத்தை, சர்வதேச, உள்ளூர் சமூகங்களுக்கு எதிரில், நிராகரித்து, பிரிவினைவாதத்தை நியாயப்படுத்தி, தேசபக்தர்களை ஏமாற்றியுள்ளது. ஒரு இலங்கையனாக வெட்கமும், கவலையும் அடைகிறேன் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் தன் டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

தமது சமூக தள செய்தி பற்றி மேலதிக விளக்கம் கேட்ட போது, இந்த அரசாங்கம் தமிழீழ கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளது என்பதை தவிர வேறெதுவும் சொல்ல விரும்பவில்லை என மனோ கணேசன் எம்பி கூறினார்.

இன்றைய சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படவில்லை. கடந்த ஆட்சியில் 2016ம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் ஆரம்பிக்கபட்ட தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தை பாடும் வழமை, இவ்வருட சுதந்திர தின நிகழ்வில் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதை, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் விவகாரம் என்ற முறையில் மனோ கணேசன், அமைச்சரவை உபகுழு மூலம் முன்னெடுத்திருந்தார்.

இவ்வருட சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாது என்ற செய்தி பரவிய நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் கவனத்துக்கு இதை பலமுறை மனோ கணேசன் கொண்டு வந்தார். நேற்று மனோ கணேசன், “இந்த கடைசி தருணத்திலாவது, நல்ல முடிவை எடுங்கள்” என ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.