அனுராவுக்கு வாக்களித்தால் கோத்தா வெற்றிபெறுவார் – லால் காந்தா

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் ஜே.வி.பியின் வேட்பாளர் அனுரா திஸநாயக்காவுக்கு வாக்களித்தால் கோத்தபாயா ரஜபக்சா வெற்றிபெற வாய்ப்புக்கள் உள்ளதாக தேசிய மக்கள் சக்தி என்ற கட்சியின் செயற்பாட்டாளர் லால் காந்தா தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையின் எம்பிலிப்பிட்டியாவில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கோத்தபாயாவின் வெற்றியை தடுக்க வேண்டுமெனில் முதலாவது தெரிவை அனுராவுக்கும் இரண்டாவது தெரிவை கோத்தவை தோற்கடிப்பதற்கும் வழங்க வேண்டும் என அவர் சிங்கள மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரணதுங்கா சஜித் பிரேமதசாவுக்கு ஆதரவான பிரச்சாரத்தை தென்னிலங்கையில் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றார்.

மேற்குலகத்தின் ஆலோசனையின் படி சென்ற தடவை மைத்திரிபால சிறீசேனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட சந்திரிக்கா தற்போது சஜித்துக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.