அநுருத்த ரத்வத்தவின் புதல்வரின் அடிவடித் தனங்கள்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் , முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் தாய் மாமனுமான அநுருத்த ரத்வத்தவின் மகனான, பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான லொகான் ரத்வத்த தனது அடாவடித் தனங்களை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.

கடந்த 30ஆம் திகதி லொகான் ரத்வத்தவின் மனைவி நிலாவெளி கோபாலபுரம் உள்வீதியில் மீன்வியாபாரம் செய்யும் ஒருவரை தனது ஜீப் வண்டியால் மோதிவிட்டு தப்பிச் சென்று விட்டார். அச்சமயம் அவர் போதையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செயலுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். தனக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களை தனது பாதுகாப்பு பிரிவினரை (MSD- அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவினர்) அனுப்பி துப்பாக்கியை காட்டி மிரட்டி அச்சுறுத்தியுள்ளனர்.

இதனையறிந்த குச்சவெளிப் பொலிசார் மக்களை மிரட்டி வழக்கை வாபஸ் பெறும்படி அழுத்தம் கொடுத்துள்ளனர். அப்பகுதி மக்கள் இது தொடர்பாக விசனம் தெரிவித்துள்ளனர்.

இவர் அநுருத்த ரத்வத்தவின் 3 புதல்வர்களில் மூத்த புதல்வராவார். இவரின் மற்றய சகோதரர்கள் மகேன் மற்றும் ஷானுக்க ஆவர். சிறுவயது முதலே சண்டியனாகவே வளர்ந்தவர். தந்தையின் பெயரை வைத்தே சிறுவயது முதலே கிளப், ஹோட்டல்கள், விடுதிகள் போன்றவற்றில் அடாவடித்தனங்களில் ஈடுபடுபவர். தற்போது பாராளுமன்ற உறுப்பினராக வந்தும் தனது இந்த செயல்களை தொடர்ந்த வண்ணமே உள்ளார்.