கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உண்ணாவிரதமிருந்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரருக்கு ஆதரவாக பெருமளவு சிங்கள மக்கள் கண்டியில் அணிதிரண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
ஆண்கள் பெண்கள் என பலரும் தேரரைச் சந்தித்தவண்ணமுள்ளதுடன் தேரரின் போராட்டத்திற்கு தமது ஒத்தாசைகளையும் நல்கிவருகின்றனர்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மேற்கு ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை ஜனாதிபதி தலையிட்டு பதவி நீக்கம் செய்யவேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி ரத்ன தேரர் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளார். இந்த நிலையிலேயே பல்வேறு சிங்களத் தரப்பினரும் அவரது போராட்டத்திற்கு தமது ஆதரவினைத் தெரிவித்துவருகின்றனர்.
இதேவேளை காலையில் பொதுபலசேனாவின் தலைவர் ஞானசார தேரர் அத்துரலிய ரத்னதேரரைச் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன் அரசாங்கத்துக்கு 24 மணி நேர காலக்கெடுவும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.