ரணில் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளராக “ஆவா குழு” அருண் – ஆதரவாளா்கள் கடும் அதிா்ச்சி

7 1 ரணில் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளராக “ஆவா குழு” அருண் - ஆதரவாளா்கள் கடும் அதிா்ச்சிஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளராக “ஆவா குழு”வின் தலைவராக தெரிவிக்கப்படும் அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க இந்த விடயத்தை அறிவித்தார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனே செயற்பட்டு வருகின்றார். அருண் சித்தார்த்தின் நியமனம் குறித்து விஜயகலா மகேஸ்வரனுக்கோ, கட்சியின் ஏனைய வடக்குப் பிரமுகர்களுக்கோ, பிரதிநிதிகளுக்கோ கட்சியின் தலைமையகத்திலிருந்து எதுவுமே இதுவரை அறிவிக்கப்படவில்லை எனத்தெரிகின்றது.

ஆவா குழுவின் தலைவராக அருண் சித்தாா்த் செயற்பட்டு வந்திருப்பதாக அவரே பல சந்தா்ப்பங்களில் தெரிவித்திருக்கின்றாா். அதேவேளையில், பல்வேறு குற்றச் செயல்களுக்காக பல சந்தா்ப்பங்களில் சிறைவாசமும் அனுபவித்தவா்.

நேற்று இந்த அறிவிப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தில் இதுவரை காலமும் கட்சியின் ஆதரவாளர்களாக உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக இருந்த எவரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியையும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையும் கொச்சையாக விமர்சித்து வருபவருக்கு கட்சியின் மாவட்ட அமைப்பாளர் நியமனமா எனக் கட்சியின் வடக்கு ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி உருவாகியுள்ளது என்று உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.