யாழில் மேலும் 6பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

யாழ்ப்பாணத்தில் மேலும் 6பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்றும் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நேற்று கொரோனா தொற்று அறிகுறி சந்தேகத்தில் 6பேருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்களுக்குத் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொற்று நோய் சந்தேகத்தில் யாழ். வைத்தியசாலையிலும் பலர் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வைத்தியசாலைக்கு வெளியே தொற்று நோய்ப் பரிசோதனை மேற்கொண்ட 10 பேரில் 3பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் 7பேருக்கு தொற்று இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

அத்துடன் சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியவர்களில் தனிமைப்படுத்தலில் உள்ள 20பேரில் அடுத்த 10 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர்களின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.