மக்களின் உரிமைக்குரலாக பல தசாப்தங்களாக திகழ்ந்தவர் ஆயர் – சம்பந்தன் இரங்கல்

“ஆண்டகை ஆயர் இராயப்பு ஜோசப் மக்களின் உரிமைக்குரலாக பல தசாப்தங்களாக திகழ்ந்தவர்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆண்டகையின் மறைவை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது:

“முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்திரு இராயப்பு ஜோசப் அவர்களின் மறைவானது தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும்.

ஆண்டகை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் மக்களின் உரிமைக்குரலாக பல தசாப்தங்களாக திகழ்ந்தவர். மக்களோடு மிகவும் நெருங்கிப்பழகிய ஆயர் அவர்கள் தமிழ் மக்களின் இக்கட்டான அனைத்து கட்டங்களிலும் தாம் நேசித்த மக்களிற்காக முன்னின்று போராடிய ஒருவராவார். இன மத மொழிகளிற்கப்பால் சாதாரண மக்களின் உரிமைகளிற்காக எவ்வித தயக்கமும் பாரபட்சமும் இல்லாமல் அயராது பணியாற்றிய ஒரு தலைவரை இன்று நாம் இழந்துள்ளோம்.

மக்களின் உரிமைகளிற்காக போராடிய மறைந்த ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களின் பிரயத்தனங்கள் மெய்ப்பட வேண்டும் என நாம் இறைவனை பிரார்த்திப்பதோடு, ஆண்டகையின் மறைவால் துயறுற்றிருக்கும் அவரது உறவினர்கள் திருச்சபை மக்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அன்னாரது ஆன்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திப்போம்