மகிந்த தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்கிறது

மகிந்த பிரதமராக பதவியேற்கும் அதேவேளை 15 பேர் கொண்ட அமைச்சரவை இன்று காலை அமைக்கப்படவுள்ளது.

இன்று காலை ரணில் விக்கிரமசிங்க தனது ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவிடம் கையளித்த பின்னர் இந்த 15பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவையில் 2 தமிழர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. வடக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு, இந்து கலாசார அமைச்சுப் பதவி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்படவுள்ளது.

நேற்று முன்தினம் வெளியாகிய செய்திகளில், டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் பங்கெடுப்பதில்லையென தீர்மானித்துள்ளதாக வெளியாகியிருந்தது. ஆனால் இப்போது டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட இருக்கின்றது.

அத்துடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சுப் பதவி ஆறுமுகம் தொண்டமானிற்கு வழங்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரான வியாழேந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுவதாக அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத போதிலும், அவருக்கு பிரதி அமைச்சுப் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுதந்திரக் கட்சி சார்பாக மூவருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன. இதேவேளை கிழக்கு முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இடம்பெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.