பாரிஸ் கிளப் முன்வைத்த நிபந்தனைகளுக்கு உடன்பட சீனா மறுப்பு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் முன்வைத்த அதே நிபந்தனைகளுக்கு சீனா உடன்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனைத்து கடன் வழங்குநர்களும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்தியாவின் நிபந்தனைகளுக்கு பாரிஸ் கிளப் ஒப்புக்கொண்டாலும், அதை ஏற்க மறுத்த சீனா, தனது சொந்த நிபந்தனைகளை முன்வைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாளை பெங்களூரில் நடைபெறும் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் கலந்துரையாடலில் பொருளாதார வீழ்ச்சியடைந்த நாடுகளுக்கு உதவுவது குறித்து ஆராயப்படவுள்ளது.

குறித்த சந்திப்பில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முறை குறித்து சீன நிதியமைச்சருடன் கலந்துரையாட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்காவிடின் எரிபொருள், மின்வெட்டு என பொது மக்கள் பாரிய சிரமங்களை அனுபவிக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.