நேபாள பிரதமர்   கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கம் 

நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒளியை அவரது சொந்தக் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளது அவரது எதிர் கோஷ்டி.

பிரச்சண்டா என்று அறியப்படும் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹல் – மாதவ் நேபாள் கோஷ்டி பிரதமர் ஷர்மா ஒளியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும்கூட நீக்குவதாக முடிவெடுத்தது.

கட்சியின் நிலைக்குழுக் கூட்டம் ஒன்றில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிலைக்குழு உறுப்பினர் ஜனார்தன் ஷர்மா இந்த தகவலை தெரிவித்தார்.

கட்சியிடம் கலந்தாலோசிக்காமல் நாடாளுமன்றத்தைக் கலைக்க பரிந்துரைத்தது உள்ளிட்ட செயல்களுக்கு ஷர்மா ஒளியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், அவர் பதில் ஏதும் தராததால் இது கட்சி விரோத நடவடிக்கையாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார் ஜனார்தன ஷர்மா.