Tamil News
Home செய்திகள் நில ஆக்கிரமிப்பு குறித்து ஆராயும் சர்வதேச மாநாடு – நவநீதம்பிள்ளை பிரதான உரை

நில ஆக்கிரமிப்பு குறித்து ஆராயும் சர்வதேச மாநாடு – நவநீதம்பிள்ளை பிரதான உரை

தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு- கிழக்கில் தீவிரம் அடைந்துள்ள நில அபகரிப்பு தொடர்பிலும் இதற்கெதிராக மேற்கொள்ளவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் “தமிழர் தாயகத்தை இழத்தல்: தமிழர் நிலத்தை பாதுகாப்பதற்கான உபாயங்களை வகுத்தலும் பிரச்சினைகளை இனம்காணுதலும்” என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 12.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை (இலங்கை நேரம் மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை) சூம் (ணழழஅ) தொழில்நுட்பம் மூலம் நடைபெறும்.

இந்த மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நீதியரசர் விக்னேஸ்வரனுடன் இணைந்து இம் மாநாட்டை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்த மாநாட்டில் ஐ. நா மனித உரிமைகள் சபை முன்னாள் உயர்ஸ்தானிகரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதியரசருமான திருமதி நவநீதம் பிள்ளை, பிரித்தானியாவின் சர்வதேச புகழ்பெற்ற முன்னணி வழக்குரைஞரும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளயரின் பாரியருமான செரி பிளயர் மற்றும் கனடாவின் சிறப்புமிக்கோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவரும் 2010 ஆம் ஆண்டு மனித உரிமைகள் செயற்பாடுகளுக்காக நோபல் பரிசுக்கு முன்மொழியப்பட்டவருமான சர்வதேச மனித உரிமைகள் வழக்குரைஞர் டேவிட் மாடஸ் ஆகியோரும் இந்த மாநாட்டில் முதன்மை உரை ஆற்றுகின்றார்கள்.

இந்த மாநாட்டில் எல்லாமாக நான்கு அமர்வுகள் இடம்பெறவுள்ளன. முதலாவது அமர்வு “வடக்கு – கிழக்கில் தமிழர் நிலங்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுதல்” என்ற தலைப்பில் நடைபெறும். இந்த அமர்வில் வடக்கு – கிழக்கில் நடைபெறும் நில அபகரிப்பு தொடர்பில் ‘முடிவற்ற போர்” என்ற ஆய்வு அறிக்கையை வெளியிட்ட அமெரிக்க சிந்தனை மையமான ஓக்லாண்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனுராதா மிட்டால், ஒபாமா நிர்வாக வெள்ளை மாளிகை உத்தியோகத்தரும் தற்போது வட கரோலினா மாநிலத்தின் செனட்டருமான வெய்லி நிக்கல், மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் பவானி பொன்சேகா, முன்னாள் மாகாண காணி ஆணையாளர் குருநாதன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இரண்டாவது அமர்வு “நில அபகரிப்பு தொடர்பிலான சட்ட மற்றும் அரசியல் சவால்கள் மற்றும் பரிகாரங்கள்” என்ற கருப்பொருளில் நடைபெறும். இந்த அமர்வில் யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரி.விக்னராஜா, முன்னணி சட்டத்தரணி கே. எஸ். ரட்ணவேல், வடக்கு -கிழக்கு சிவில் அமைப்புக்கள் சார்பில் தவத்திரு வேலன் சுவாமிகள், வட மாகாண முன்னாள் அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

மூன்றாவது அமர்வு “நிலம், வெளிநாட்டு முதலீடு மற்றும் இருதரப்பு முதலீட்டு உடன்படிக்கைகள்” என்ற தலைப்பில் நடைபெறும். இந்த அமர்வில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியரும் “வெளிநாட்டு முதலீடு தொடர்பிலான சட்டம்” என்ற பிரபல்யம்மிக்க நூலை எழுதியவருமான கலாநிதி எம். சொர்ணராஜா, யாழ் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை முன்னாள் பேராசிரியர் வி. நித்தியானந்தம், பிரித்தானியா நோட்டிங்காம் பல்கலைக்கழக சர்வதேச மனித உரிமைகள் பேராசிரியர் கலாநிதி தமிழ் ஆனந்தவிநாயகன், சட்டத்தரணி வெரோனிகா பாவ்லோஸ்காயா, மனித உரிமைகள் ஆலோசகர் லொரான்ஸோ பியோரிட்டோ ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

புலம்பெயர் தமிழ் இளையோர்கள் கலந்துகொள்ளும் அமர்வு ஒன்று இறுதியாக நடைபெறும்.

தமிழர் தாயகத்தில் நடைபெறும் நில அபகரிப்பை தடுக்கும் வழிவகைகளை ஆராயும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு தொடர்ந்தும் கால இடைவெளி விட்டு நடைபெறும். இந்த மாநாட்டின் இரண்டாவது பகுதி மே மாதம் அளவில் நடைபெறும். அதன்போது வடக்கு – கிழக்கில் நடைபெறும் நில ஆக்கிரமிப்பு பற்றிய ஆவணப் படம் ஒன்று வெளியிடப்படும்.

எதிர்வரும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் இம் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு எல்லா தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகின்றது. இந்த மாநாட்டில் எவரும் கலந்துகொள்ளலாம். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களிலும் இந்த மாநாடு நேரடியாக காண்பிக்கப்படும்.

MARCH 20, 12:30 – 5:30 PM (UK Time)
Zoom Meeting ID: 925 7244 2450
Weblink: http://bit.ly/TamilLand
Passcode: 238923